கட்சிக்கு வெளியிலிருந்து தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று நம்பினால், ரஃபிஸி ராம்லி பதவி விலக வேண்டும் என ஒரு பிகேஆர் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், முன்னாள் துணைத் தலைவர் பிகேஆர் கட்சியை உள்ளிருந்தே பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிகேஆர் மத்திய தலைமை மன்ற உறுப்பினர் ஏ. குமாரேசன், ரஃபிஸி ஆணவமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினார். தன்னை வெளியேற்றினால், அவர் இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்பவராகவும் கட்சிக்கு “ஆபத்தானவராகவும்” மாறுவார் என்று அவர் கூறியிருந்தார்.
பிகேஆர்இன் போராட்டத்தில் உண்மையான அக்கறை கொண்ட எந்தத் தலைவரும் அரசியல் ஆதாயத்திற்காகக் கட்சியை அச்சுறுத்த மாட்டார் என்று கூறிய அந்த பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர், ரஃபிஸியின் இந்த நடத்தையை “உள்நாட்டு நாசவேலை” என்று வர்ணித்தார்.
“பிரதமர் அன்வார் இப்ராஹிம் உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் வேளையில், ரஃபிஸி பிகேஆர் தலைமையை வெளிப்படையாகத் தாக்கி மலிவான அரசியல் நாடகங்களில் ஈடுபடத் தேர்வு செய்கிறார்.
இது வீரம் அல்ல, மாறாகப் பொறுப்பற்ற செயல். இது மலேசியர்களின் பார்வையில் கட்சியையும் அரசாங்கத் தையும் பலவீனப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.” “கட்சியை உள்ளிருந்தே சீர்குலைக்கும் ரஃபிஸி, பிகேஆர் இல் நீடிக்க முடியாது. கட்சியின் கௌரவத்திற்காகவும், மக்களின் நம்பிக்கைக்காகவும், ரஃபிஸி பிகேஆர்லிருந்து) ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.




