குவாண்டான், டிசம்பர் 10 — கேமரன் ஹைலாண்ட்ஸின் தானா ராட்டாவில் உள்ள புன்சக் அரபெல்லா அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாக் சி-யைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் நவம்பர் 28ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வாடகை உதவி வழங்க பாஹாங் அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தானா ராட்டா சட்டமன்ற உறுப்பினர் ஹோ சி யாங் (பக்காத்தான் ஹராப்பான்) கூறுகையில், 39 பேரைக் கொண்ட ஒன்பது குடும்பங்கள் இன்னும் தற்காலிக மீட்பு முகாமில் (PPS) தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“மலை சரிவைச் சீரமைக்கும் பணிகள் நிறைவுபெறும் வரை, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வாடகை உதவி வழங்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று விஸ்மா ஸ்ரீ பாஹாங்கில் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில், பாஹாங் 2026 பட்ஜெட் விவாதத்தின் போது பேசினார்.
முன்னதாக, கேமரன் ஹைலாண்ட்ஸ் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்பு காரணங்களால் புன்சக் அரபெல்லா பிளாக் சி-யில் உள்ள 24 வீட்டு அலகுகளில் வசித்த 91 பேர், அங்குள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மீட்பு முகாமிற்கு இடம்பெயர உத்தரவிடப்பட்டிருந்தனர்.




