தேசிய அளவிலான திருக்குறள் ஒலிம்பியாட் போட்டியின் பரிசளிப்பு விழாவிற்குத் தலைமைதாங்கி பரிசுகளை எடுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த போட்டியை முன்னெடுத்த மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) சிலாங்கூர் மாநிலப் பேரவைக்கு எனது மனமார்ந்த பாராட்டு என டத்தோஸ்ரீ எம் சரவணன் தமது உரையில் களம் இறங்கினார்.
மேலும் அவர் கூறுகையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, “மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குச் சொன்ன அறிவுரை” திருக்குறள். தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும், செயற்கை நுண்ணறிவு (AI) பேசப்படும் இக்காலத்திலும், வள்ளுவம் காட்டும் அறநெறிகள் அப்படியே பொருந்துவதுதான் அதன் அதிசயம். வாழ்க்கையின் எல்லா காலகட்டத்திலும், அனைத்திற்கும் பொருந்தும் செய்தியைத் திருவள்ளுவர் அருளியுள்ளார்.
திருக்குறளை மனனம் செய்வது மட்டும் அதன் நோக்கமல்ல.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என்ற குறளுக்கேற்ப, நீங்கள் படித்த குறள்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் வாழ்வில் கடைப்பிடித்தால், அதுவே இந்த போட்டிக்குக் கிடைத்த உண்மையான வெற்றி என பங்கேற்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு திருக் குறளின் பெருமையை தமதுரையில் எடுத்துரைத்தார் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன்.




