புதிதாக நிறுவப்பட்ட மலேசிய ஊடக மன்றத்தின் (எம்.எம்.சி) தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டு ள்ளார். இந்த நியமனம், மன்றத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று அம்மன்றம் தெரிவித்துள்ளது.
மே 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட நளினியின் நியமனத்தை, ஊடகத் துறையின் தரநிலைகளைக் கண்காணிக்கும் ஒரு சுதந்திரமான, நம்பகமான மற்றும் பொது நலன் சார்ந்த அமைப்பாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான அதன் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல் என்று மன்றம் விவரித்துள்ளது.
மலேசிய ஊடக மன்றச் சட்டம் 2025-இன் கீழ் தனது கடமைகளைச் செயல்படுத்தத் தொடங்கும் இந்த அமைப்பை வழிநடத்த, நல்லினியின் பரந்த அனுபவமும், நீதித்துறை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி கிடைப்பதில் அவர் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பும் அவரை ஒரு வலுவான நிலையில் வைத்துள்ளதாக எம்.எம்.சி கூறியது.
ஊடகத் துறைக்கான ஒரு சுய-ஒழுங்குமுறை அமைப்பாக நிறுவப்பட்ட எம்.எம்.சி, நெறிமுறை சார்ந்த இதழியலை ஊக்குவித்தல், தொழில்முறைத் தரங்களை வலுப்படுத்துதல், பொதுமக்களின் புகார்களைக் கையாளும் ஒரு வழிமுறையை நிர்வகித்தல் மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாகும்.
செய்தி நிறுவனங்கள் மீதான நிதி நெருக்கடிகள், விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, தவறான தகவல்களின் பரவல், பத்திரிகையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஊடகத் துறை எதிர்கொண்டு வரும் வேளையில் நளினியின் நியமனம் வந்துள்ளது என்று எம்எம்சி கூறியது.




