இந்தோனேஷியாவில் காட்டுத்தீ பரவ காரணமாக இருந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 72 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மத்திய, மேற்கு பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட கடுமையான வறண்ட காலநிலை மற்றும் குறைவான மழையளவு காரணமாக காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளது.
இக்காட்டுத்தீயால் ஏற்பட்ட அடர்ந்த புகையானது அண்டை நாடான மலேசியா வரை பரவி வருகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவில் உள்ள பண்ணைகள் மற்றும் தோட்டங்களுக்குரிய நிலங்களை குறைந்த செலவில் சுத்தப்படுத்த வேண்டுமென்ற நோக்குடன், பலர் வேண்டுமென்றே காடுகளுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் உள்ள பல மாகாணங்களில் நிகழ்ந்த காட்டுத்தீ தொடர்பான வழக்குகளில் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.




