ஹரியான் மெட்ரோவின் வரைகலை வடிவமைப்பாளரான மறைந்த முகமது பைசல் முகமது ஃபௌசியின் குடும்பத்தினருக்கு, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீபஹ்மி ஃபட்சில் இன்று தனது இரங்கலைத் தெரிவித்தார்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள ஃபஹ்மி, நாட்டின் ஊடக மற்றும் பதிப்புத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்திய ஒரு முக்கியப் பங்களிப்பாளர் என்று பைசலைக் குறிப்பிட்டார்.
“பைசலின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ள அப்துல்லா ஹுகும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
“அவரது குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள்.
“இந்த இழப்பை எதிர்கொள்ள அவர்களுக்கு வலிமையும் மனவுறுதியும் கிடைக்கட்டும். அவரது ஆன்மா கருணையுடன் ஆசீர்வதிக்கப்பட்டு, நல்லோர்களுடன் சேரவும் நாம் பிரார்த்திப்போம்,” என்று பஹ்மி தனது முகநூல் பதிவில் கூறினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹரியான் மெட்ரோவில் வரைகலை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த ஃபைசல், இன்று தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 44.
அவருடைய சகோதரரான 45 வயது ஃபிர்தாஸ் முகமது ஃபௌஸி, தனது சகோதரரின் தோழர் மூலமாக ஃபைசலின் மரணச் செய்தி தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
நாளை மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கோலா பிலாவில் உள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது




