தாமான் கோன்னாட்டில் கடந்த ஏப்ரல் மாதர்தில் , சுமார் RM14,000 மதிப்புள்ள தங்க நெக்லஸ் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட, 20 குற்றப் பின்னணி கொண்டதாகக் கருதப்படும் உள்ளூர் வாசி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமது ரோஸ்டி தாவூத், ஏப்ரல் 12 ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில் ஒரு காபிக்கடைக்கு முன்னால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரும் அவரது மனைவியும் உணவகத்திற்கு வெளியே காலை உணவு அருந்திக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரின் தங்க நெக்லஸ் மற்றும் பதக்கத்தைப் பின்னாலிருந்து திருடிவிட்டுத் தப்பிச் சென்றார்.
“கிடைத்த தகவலின் அடிப்படையில், மே 24 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில், புச்சோங்கில் உள்ள பண்டார் கின்ராரா, ஜாலான் கின்ராரா 6 சாலையின் ஓரத்தில் காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு 30களின் நடுப்பகுதியில் வயது இருக்கும் என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, சோதனையின் முடிவுகளில், சந்தேக நபருக்கு 20 குற்றப் பதிவுகளும், நான்கு போதைப்பொருள் தொடர்பான பதிவுகளும் இருப்பது கண்டறியப்பட்டது.
“இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 392-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றக் காவல் மனு நிராகரிக்கப்பட்டு, சந்தேக நபர் தற்போது காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.
மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை ஆவணங்கள் முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.




