பாடாங் பெசார் (Padang Besar) பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கால்நடைத் தொழுவத்திற்கு அருகில் பறிக்கப்பட்ட காட்டுக்காளான்களைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட கடுமையான உணவு நச்சுத்தன்மை அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
முகமது பாசிர் அபிதுதின் அப்துல் ரசாக் மற்றும் இன்டான் நபிலா மசெலம் (இருவருக்கும் வயது 28) ஆகிய அந்தத் தம்பதியினர், மதிய உணவிற்காக அந்தக் காளான்களைச் சமைத்துச் சாப்பிட்டதாகவும், பின்னர் சில மணிநேரங்களில் மயங்கி விழுந்ததாகவும் ‘பெரித்தா ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது. மலேசிய ஜாரியா அறக்கட்டளையின் தன்னார்வப் படையின் (BSYJM) தகவலின்படி, மாலை 4 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற மீட்புக் குழுவினர், குளியல றையில் பலவீனமான நிலையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப் பட்டிருந்த அந்தத் தம்பதியினரைக் கண்டனர்.
வீடு முழுவதும் வாந்தி மற்றும் மலத்தால் நிறைந்திருந்ததாகவும், பாதிக்கப்பட்ட இருவராலும் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததாகவும் BSYJM தலைவர் மஹட்சிர் அப்துல் ஹமீத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இருவரின் உடல் எடையும் 150 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணி சவாலாக அமைந்தது; அவர்களை இரண்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்ற ஆறு BSYJM உறுப்பினர்களும் கிராம மக்களும் தேவைப்பட்டனர்.
அவர்கள் சிகிச்சைக்காக சிக் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் குடும்பத்தினர் அவை உண்ணக்கூடியவை என்று தவறாக நினைத்ததாகவும் மஹட்சிர் கூறினார். பின்னர் அந்தக் காளான்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்தத் தம்பதியினரின் உடல்நிலை குறித்த விவரங்கள் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்பட வில்லை; நிபுணர்களால் முறையாக அடையாளம் காணப்படாத வரை காட்டுக்காளான்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு நினைவூட்டுகின்றனர்.




