இந்தியாவில் பிரபல நடிகைகள் பலர் தங்களின் கருமுட்டைகளைப் பாதுகாக்கும் முடிவை எடுத்துள்ளனர். இந்த டிரெண்ட் சினிமா துறையில் வேகமாக பரவி வருகிறது. மெஹ்ரீன் பிர்சதா, தமிழில் தனுஷுடன் ‘பட்டாஸ்’ மற்றும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ போன்ற படங்களில் நடித்த இவர், அண்மையில் தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோவுடன் பகிர்ந்து கொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதைப் பற்றி சிந்தித்து, சரியான வயதில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். இது பெண்களின் எதிர்காலத் தாய்மைக்கான பாதுகாப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது 30களின் ஆரம்பத்தில் கருமுட்டைகளைச் சேமித்து வைத்தார். சினிமாவில் தனது இலக்குகளை அடையவும், அந்த நேரத்தில் தனக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுக்காததாலும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். பின்னர், 2022ல் வாடகைத்தாய் மூலம் நிக் ஜோன்ஸ் – பிரியங்கா தம்பதியருக்குக் குழந்தை பிறந்தது.
பாலிவுட் நடிகையான இஷா குப்தா, தனது 31வது வயதில் (2017ம் ஆண்டு) கருமுட்டைகளை உறைய வைத்தார். மகேஷ்பாபு உடன் ‘நேநொக்கடைன்’ படத்தில் நடித்த முன்னணி பாலிவுட் நடிகையான கிரித்தி சனோன் அண்மையில் தனது கருமுட்டைகளை உறைய வைப்பதாகத் தெரிவித்தார். அதேபோல, நடிகை அகன்ஷா ரஞ்சன் கபூர் மகளிர் தினத்தை ஒட்டி தனது கருமுட்டை காக்கும் பயணத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.




