ஷா ஆலம்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் 5 கிலோ விற்கும் அதிகமான மெத்தாம் பேட்டமைன் (methamphetamine) போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முதிய பெண்களை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-ன் கீழ், சகோதரிகளான வோங் மெய் சுன் (70) மற்றும் வோங் யோக் பூங் (61) ஆகியோர் மீதான குற்றச்சாட்டு களுக்கான ஆதாரங்களை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி சூரியதி ஹசிமா ஹஷிம் கூறினார்.
அவர்களுடன் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ங் காக் திம் (67) மற்றும் கூன் வென் லூங் (48) ஆகியோரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆகஸ்ட் 8, 2021 அன்று அம்பாங்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் போதைப்பொருளைக் கடத்தியதாக இவர்கள் நால்வர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வோங் சகோதரிகள் கூனை வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் நீல நிறப் பை ஒன்றை ங்-இடம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
சம்பவ இடத்திலேயே ங் மற்றும் கூன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்; வோங் சகோதரிகள் அதே நாளில் அவர்களது வீட்டில் கைது செய்யப் பட்டனர். அவர்கள் ஐந்து ஆண்டு களுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நால்வரையும் விடுதலை செய்யும்போது, ஆதாரச் சங்கிலியில் (chain of evidence) கடுமையான இடைவெளி இருந்ததாக நீதிபதி சூரியதி குறிப்பிட்டார்.
போதைப்பொருளைப் பெற்றபோது, அவை இரண்டு முறை ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டிருந்ததை வேதியியலாளர் (chemist) கவனித்ததாகவும், ஆனால் அவை ஒரு முறை மட்டுமே சுற்றப்பட்டிருந்ததாகக் கூறும் சோதனைப் பட்டியலுடன் (search list) இது முரண்படுவதாகவும் அவர் கூறினார்




