சுமார் ஒரு கோடி இருபது லட்சம் ரூபாய் (RM520,000) மதிப்புள்ள 3.45 கிலோ உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் ஒருவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஆகஸ்ட் 31 அன்று கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் வந்த பயணியை விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்ததாக சென்னை சுங்கத்துறை தெரிவித்து உள்ளது.
சுங்க அதிகாரிகளிடம் எந்தப் பொருட்களையும் அறிவிக்காமல் விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் வழியாகச் செல்ல முயன்றபோது சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக அது கூறியது.
அவரது செக்-இன் செய்யப்பட்ட பயணப் பைகளை விரிவாக ஆய்வு செய்ததில், ஒரு போலி அடிப்பாகத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஒளிபுகும், காற்றுப்புகாத பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சென்னை சுங்கத்துறை கூறியது.
அந்தப் பொட்டலங்களில் 3,452 கிராம் உலர்ந்த பச்சை கலந்த பழுப்பு நிறச் செடிகள் இருந்தன, அவை கஞ்சா என உறுதி செய்யப்பட்டன.
இந்தியாவின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் 1985-இன் கீழ் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பரந்த கடத்தல் வலையமைப்புகளுடன் இவருக்கு இருக்கக்கூடிய தொடர்பு களைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மலேசிய நாட்டவர் ஒருவர் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னைக்குள் கடத்தியதாகக் கூறப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும்.
ஆகஸ்ட் 8 அன்று, பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது மலேசியர் ஒருவர், பாங்காக்கிலிருந்து வந்த விமானத்தில் 4.03 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது அதே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தாய்லாந்திலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுவதாக புக்கிட் அமான் உறுதிப்படுத்தியுள்ளது.




