ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில், சுமார் 1.6 மில்லியன் ஹாங்காங் டாலர் (830,000 மலேசிய ரிங்கிட்) மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா அவரது பயணப் பையில் (checked baggage) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 33 வயதுடைய மலேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அந்தப் பெண் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து செப்டம்பர் 12 அன்று வந்திறங்கியதாகவும், பின்னர் சுங்கச் சோதனையின்போது தடுத்து நிறுத்தப் பட்டதாகவும் ஹாங்காங் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
“சுங்கச் சோதனை நடைமுறையின் போது, அதிகாரிகளால் அவரது பயணப் பைக்குள் சுமார் 8 கிலோ எடையுள்ள, கஞ்சா மொட்டுகள் என சந்தேகிக்கப் படும் பொருட்கள் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்,” என்று அந்தத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாங்காங்கின் ‘ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின்’ (Dangerous Drugs Ordinance) கீழ், ஆபத்தான போதைப்பொருட்களைக் கடத்துவது குற்றம் என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 5 மில்லியன் ஹாங்காங் டாலர் (2.6 மில்லியன் மலேசிய ரிங்கிட்) அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
விமான நிலையத்தில் கஞ்சாவுடன் மலேசியர்கள் பிடிபட்ட முந்தைய சம்பவங்களைத் தொடர்ந்தே இந்தச் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது; ஜூலை மாதத்தில் மட்டும் இது போன்ற மூன்று சம்பவங்கள் பதிவாகி யுள்ளன.
ஜூலை 30 அன்று, பாங்காக்கிலிருந்து வந்திறங்கிய 27 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவரின் பயணப் பையில், 600,000 ஹாங்காங் டாலர் (311,000 மலேசிய ரிங்கிட்) மதிப்புள்ள சுமார் 3 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




