கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையம் (KKIA) மற்றும் தாவாவ் ஆகிய இடங்களில் மார்ச் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில், சபா காவல்துறை கிட்டத்தட்ட RM2.6 மில்லியன் மதிப்புள்ள 53.85 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்தது. இதன் விளைவாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் அதிகாரிகள், மார்ச் 11 அன்று இரவு சுமார் 11.15 மணியளவில் KKIA-வில் 36 வயதுடைய ஒருவரைக் கைது செய்ததாக சபா காவல்துறை ஆணையர் ஜௌதே டிகுன் தெரிவித்தார்.
“அனைத்துலக வருகைப் பகுதியிலுள்ள மூன்று பெட்டிகளை ஆய்வு செய்ததில், மெத்தம்பெட்டமைன் என நம்பப்படும் படிகம் போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது. அதன் எடை 30.30 கிலோ மற்றும் அதன் மதிப்பு RM1.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது,”
சுயாதீன கட்டிடக்கலைப் பணியாளரான சந்தேக நபர், 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக மார்ச் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மார்ச் 13 அன்று, போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில், தாவாவில் உள்ள ஒரு வாகன சேமிப்பு நிலையத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.சுமார் RM153,000 மதிப்புள்ள 3.07 கிலோ மெத்தம்பெட்ட மைன் அடங்கிய மூன்று பிளாஸ்டிக் பொட்டலங்களை காவல்துறை பறிமுதல் செய்தது.
அதனைத் தொடர்ந்து, காம்பங் ஜாவாவில் உள்ள ஒரு இரண்டு மாடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 36 முதல் 73 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.




