டிவி 3 -இன் முன்னாள் ஒளிபரப்புப் பத்திரிகையாளரான டத்தோ கரம் சிங் வாலியா, இன்று அதிகாலை காலமானார்.
மீடியா ப்ரிமா பெர்ஹாட் நிறுவனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக் கான குழு நிர்வாக ஆசிரியராகவும் (GME) இருந்தவர். அவரது மறைவு பற்றி சகோதரர் ஜஸ்பந்த் சிங், சற்று நேரத்திற்கு முன்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
மிகவும் செல்வாக்கு மிக்க சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் என்று அறியப்பட்ட இவர், குறிப்பாக மாசுபாடு, பொதுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதில், தனது துணிச்சலான மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறப்பு அறிக்கைகளுக்காகப் பெயர் பெற்றவர்.
தனது தொழில் வாழ்க்கை முழுவதும், கரம் சிங் வாலியா, டிவி3இல் வழங்கிய அறிக்கைகள் மூலம் நாட்டின் ஒளிபரப்பு உலகில் மிகவும் அறியப்பட்ட முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரது தனித்துவமான, உறுதியான, அதிகாரப் பூர்வமான மற்றும் பார்வையாளர்கள் எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய வழங்கல் பாணியே இதற்குக் காரணம்.
மேலும், ஆழமான கள ஆய்வு அணுகுமுறை மற்றும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் துணிச்சல் ஆகியவற்றைக் கொண்ட இவர், மலேசியாவில் சுற்றுச்சூழல் பத்திரிகை யின் முன்னோடியாகவும் கருதப் படுகிறார்.




