ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, RM50,000 மதிப்புள்ள மோசடியான கோரிக்கை களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மற்றும் பெட்டாலிங் கோவிலின் முன்னாள் தலைவர் ஆகியோர் இன்று அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி டத்தோ முகமது நசீர் நோர்டின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, 65 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான எம். திருசெல்வம், தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபடி, “புதிய யாகசாலைக்கான மஜ்லிஸ் ஒப்புதல், பூர்விக அம்மன் கசிவுப் பணிகளைச் சரிசெய்தல் மற்றும் பிரதான கோவிலில் (விநாயகர் சன்னதி, ஈஸ்வரி சன்னதி மற்றும் முருகன் சன்னதி) கசிவுப் பணிகளைச் சரிசெய்தல்” தொடர்பான ஆலோசனை சேவைகளுக்கான கட்டணத்தைப் பெறுவதற்காக, 15 நவம்பர் 2021 தேதியிட்ட ஒரு போலியான விலைப்பட்டியலைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த விலைப்பட்டியல், 64 வயதான கோவில் செயலாளரிடம் 22 நவம்பர் 2021 அன்று கோவில் வளாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தண்டனைச் சட்டத்தின் 471 ஆம் பிரிவின் கீழ் இந்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால், அதே சட்டத்தின் 465 ஆம் பிரிவின் கீழ் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
திருசெல்வத்திற்கு ஒரு ஜாமீனுடன் RM5,000 பிணைத்தொகையில் நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்காக மே 11 ஆம் தேதியை நிர்ணயித்தது.




