ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் அவர் காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடல் சென்னையில் இருந்து கோவில் பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமணி. 1947-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துரை, தேனம்மாள்
1966-ஆம் ஆண்டுமுதல் கவிதை, சிறுகதைகள் எழுதி வந்த இவர், 1979-முதல் நாவல் எழுதத் தொடங்கினார். இவரது முதல் நாவல் “பிறகு’ என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களை எழுதினார்.
6-ஆவது நாவலாக அஞ்ஞாடி நாவலை 2005-இல் எழுதத் தொடங்கி, 2011-இல் நிறைவு செய்தார். 1,100 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் 2012 ஜனவரியில் வெளியிடப்பட்டது. இந்த நாவலுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
இவர்சென்னையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 19-ஆம் நூற்றாண்டின் பின்னணியில், சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற மோதல், சிவகாசி பகுதியில் நிகழ்ந்த சாதிக் கலவரம் எனப் பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது அஞ்ஞாடி.
எழுத்தாளர் பூமணி “கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி யுள்ளார். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019இல் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் கதாசிரிய ராகவும் பங்காற்றியுள்ளார். அவரது வெக்கை நாவலை தழுவியே அசுரன் திரைப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது




