அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவும் வகையில், ‘சும்பாங்கன் அசாஸ் ரஹ்மா’ (SARA) உதவித்தொகையை அரசாங்கம் விரைவில் அதிகரிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு வகையான உதவிகளை வழங்கி யிருந்தாலும், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் கவலைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“நாங்கள் ‘சும்பாங்கன் துனாய் ரஹ்மா’ (STR) மற்றும் SARA ஆகிய உதவிகளை வழங்கியுள்ளோம்; மேலும் நெகிரி செம்பிலானில் டத்தோ ஸ்ரீ அமினுடின் அரசு ஊழியர்களுக்குக் கணிசமான போனஸ் தொகையை வழங்கியுள்ளார். இருப்பினும், அனைத்துப் பிரச்சினை களும் தீர்க்கப்பட்டுவிட்டனவா? இல்லை.
“அதனால்தான் மக்களின் கவலை களுக்கு நாங்கள் செவிசாய்த்துள்ளோம்; இறைவனின் அருளால் விரைவில் அனைவருக்கும் SARA உதவித் தொகையை மேலும் அதிகரிப்போம்,” என்று அவர் கூறினார். நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நேற்று இங்கு நடைபெற்ற ‘பக்காத்தான் ஹரப்பான்’ பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
நாட்டின் பொருளாதார நிலைமை அனுமதிக்கும் பட்சத்தில், STR மற்றும் SARA உள்ளிட்ட மக்களுக்கான உதவித்தொகையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ‘மடானி’ அரசாங்கம் தொடர்ந்து பரிசீலிக்கும் என்று அன்வார் அண்மையில் கூறியிருந்தார்.
இது குறித்து நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கானுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் பட்ஜெட்டில் இது பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




