ஜொகூர் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், ஏழு பேர் கைது செய்யப்பட்டு 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம், ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
36 முதல் 46 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களில் ஐந்து உள்ளூர் ஆண்களும், ஒரு பெண் உட்பட இரண்டு வெளிநாட்டி னரும் அடங்குவர் என்று ஜொகூர் துணை காவல் ஆணையர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட 210 கிலோ போதைப்பொருட்களில் 127 லிட்டர் மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) திரவம், கொக்கைன், கெட்டமைன், ஹெராயின், எராமின் 5 (Eramin 5) மற்றும் எக்ஸ்டசி (ecstasy) மாத்திரைகள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
“உள்ளூரில் விநியோகிப்பதற்காக போதைப்பொருட்களைப் பொட்டல மிடுவதற்கு சந்தேக நபர்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது,” என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 5) இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
நடத்தப்பட்ட ஐந்து சோதனைகள் குறித்து விவரித்த துணை காவல் ஆணையர் ஹூ, ஆகஸ்ட் 2 அன்று காலை சுமார் 11 மணியளவில் குலாய் (Kulai) பகுதியில் உள்ள ஓய்வு இடத்தில் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
“அப்போது நாங்கள் ஒரு உள்ளூர் ஆணையும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணையும் கைது செய்து, ஒரு காரிலிருந்து சுமார் 82.4 கிலோ மெத்தாம்பேட்டமைன் திரவத்தைப் பறிமுதல் செய்தோம்,” என்று கூறிய அவர், அதைத் தொடர்ந்து இஸ்கந்தர் புத்திரியில் (Iskandar Puteri) உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி மற்றொரு வெளிநாட்டவரைக் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.




