இந்தி, தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், தியா மிர்சா (44). தமிழில் அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திலும் நடித்திருந்தார். கடந்த ஜூன் மாதம் பாலிவுட் நடிகை சோஹா அலிகானின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அப்போது ஒரு சம்பவத்தை பற்றி பேசினார்.
அதில், தனது வீட்டுக்கு இளநீர் கொண்டு வந்த ஊழியர் ஒருவரிடம், அவரது மகன் அவ்யான் ஆசாத் ரேகி (5), பிளாஸ்டிக் பையையும், உறிஞ்சுகுழலையும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
பெரியவர் ஒருவரிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் சிறுவன் பேசியதை சோஹா அலிகான் பாராட்டினார். ஆனால், ‘ஒரு எளிய உழைப்பாளியை அவமதிக்கும் மேல்தட்டு மனப்பான்மை இது’ என்று சமூக வலைத்தளங்களில் பலர் தியா மிர்சாவையும், அவரது மகனையும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த தியா மிர்சா, ‘என்னை நன்கு அறிந்தவர்கள், மனிதர்களை நான் எப்படி நடத்துவேன் என்று அறிவார்கள்.என் மகன் எந்த உழைப்பாளியையும் அவமதிக்கவே இல்லை. பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு விழிப்புணர்வு அவனுக்கு இருந்ததால், ‘தயவுசெய்து இதை திருப்பி எடுத்துக்கொண்டு செல்லுங்கள்’ என்று மட்டுமே அவன் சொன்னான். கடுமையான வெயில் காலத்தில் இச்சம்பவம் நடக்கவில்லை.
ஆனால், எளிய இளநீர் வியாபாரியின் வாழ்வாதாரத்தை ஒரு சிறுவன் பாதித்து விட்டதாக இணையதளங்களில் தவறான ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டனர். வாழ்நாளில் பலர் பேச தயங்கும் ஒரு நல்ல விஷயத்தை என் மகன் தைரியமாக பேசியுள்ளான்’ என்று சொன்னார்.




