முதியோர் மசோதாவை அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்கு ஒத்திவைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது; முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் விரிவானதாகவும், மலேசியாவின் அனைத்து முதியவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் இருப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை ஒரு வாய்ப்பாக அமைகிறது.
நாட்டின் வயதான மக்கள் தொகைக்கு இந்த மசோதா கொண்டுள்ள முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதலில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படவிருந்த இந்த மசோதாவை அவசரப்பட்டு தாக்கல் செய்யக்கூடாது என்று ‘பாதுகாப்பான சமூகத்திற்கான கூட்டணி’யின் (Alliance for a Safe Community) தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தை கூறினார்.
“அரசாங்கம் இவிஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதைக் காட்டுவதால், இந்தத் தாமதம் அவசியமானது. இவ்வளவு முக்கியமான ஒரு சட்டத்தை நாம் அவசரப்பட்டு கொண்டுவரக்கூடாது,” என்று சனிக்கிழமை (செப்டம்பர் 5) தொடர்பு கொள்ளப்பட்டபோது அவர் கூறினார்.
மலேசியாவில் உள்ள ஒவ்வொரு முதியவரையும் இந்தச் சட்டம் பாதிக்கும் என்பதால், முறையான விளக்கங்கள் மற்றும் விரிவான விவாதங்களுக்குப் பின்னரே இது தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று லீ வலியுறுத்தினார்.
மாநில அரசுகள், சமூகக் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகளைச் சட்டத்தில் இணைத்துக்கொள்ளவும் இந்தத் தாமதம் அரசாங்கத்திற்கு உதவும் என்று அவர் கூறினார்.
“இருப்பினும், மக்களின் உண்மையான தேவைகளை அரசாங்கம் கவனமாகக் கேட்க வேண்டும். கலந்தாலோசனை செயல்முறையிலிருந்து யாரும் விடுபடக்கூடாது,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள முதியவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது முன்மொழியப்பட்ட சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்றும் லீ கூறினார்.
“வயது முதிர்ந்த நிலையில் உள்ள ஒவ்வொரு மலேசியரும் – அவர்கள் யாராக இருந்தாலும், எங்கு வசித்தாலும் அல்லது எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் – கவனிப்பு, மரியாதை மற்றும் ஆதரவைப் பெறத் தகுதியானவர்கள்,” என்று அவர் கூறினார்.




