ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ‘டெக்னோபார்க்’ வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்.
ஐடி கம்பெனி மேலாளராகப் பதவி வகிக்கும் அவர் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார். திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17-வது மாடியில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே காங்கிரஸ் அரசு வந்தபிறகு கேரள காவல் துறையினர் போதைப்பொருளுக்கு எதிராக ‘ஆப்பரேஷன் தூபான்’ என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
ஆப்பரேஷன் தூபான் டீம் ஐடி மேலாளர் விஷாலின் பிளாட்டில் அதிரடி சோதனை நடத்தியது. விஷாலின் படுக்கையறை ஜன்னல் ஓரத்தில் ஒரு மினி கஞ்சா தோட்டத்தையே அவர் அமைத்திருந்த தைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். முட்டை வைக்கும் அட்டைப்பெட்டிகள் மற்றும் செடிகள் வளர்க்கும் சிறிய தொட்டிகள் எனச் சுமார் 70 கஞ்சா செடிகள் அங்கு வளர்ந்து நின்றன.
மேலும், 19 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி விஷாலிடம் விசாரணை நடத்தியதில், அவர் இதை விற்பனை செய்வதற்காக வளர்க்க வில்லை எனவும், தனது சொந்த தேவைக்காகவே வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கஞ்சா இலைகளை அரைத்து சட்னி செய்து சாப்பிடுவதாகவும், சில நேரங்களில் கஞ்சா இலைகளை அரைத்துப் பாலில் கலந்து குடிப்பதுமே எனது வழக்கம் என்றும் விஷால் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பகலில் ஐடி மேலாளராக வலம் வந்தவர், இரவில் தன் பிளாட்டிற்கு வந்து கஞ்சா செடிகளை வளர்த்து பல விதங்களில் சாப்பிட்டு போதையில் மிதந்துள்ளார். இதைத்தொடர்ந்து விஷாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.




