மலேசியாவில் சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளை (social visit passes) தவறாகப் பயன்படுத்தி வேலை அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளதை குடிநுழைவுத் துறை கண்டறிந்துள்ளது.
2023-இல் 1,279 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2024-இல் அந்த எண்ணிக்கை 2,644-ஆகவும், கடந்த ஆண்டில் 2,630-ஆகவும் உயர்ந்ததாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறியதாக ‘கோஸ்மோ! ஆன்லைன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி 451 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் சமூக வருகை அல்லது சுற்றுலாவுக்கான அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்தனர்; ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகளின் நிபந்தனைகளை மீறி வேலை அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
“இந்த வசதியைத் தவறாகப் பயன் படுத்துபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்; குடிநுழைவுச் சட்ட மீறல்கள் எதற்கும் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்,” என்று சைபர்ஜாயாவில் (Cyberjaya) இன்று நடைபெற்ற 104-வது குடிவரவுத் துறை தினக் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 7,105 அமலாக்க நடவடிக்கை களைத் துறை மேற்கொண்டதாகவும், இதன் விளைவாகப் பல்வேறு குடிநுழைவு சட்ட மீறல்களுக்காக 41,596 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப் பட்டதாகவும் சகாரியா தெரிவித்தார்.




