செராஸ் (Cheras) பகுதியைச் சேர்ந்த 30 வயதான முகமது டேனியல் ஆனந்தஸ் அப்துல்லா, இரண்டு குழந்தைகளின் தந்தையான இவருக்கு, ‘சும்பாங்ஹான் அசாஸ் ரஹ்மா’ (Sara) மற்றும் ‘சும்பாங்கன் துனாய் ரஹ்மா’ (STR) ஆகிய உதவிகள் அவரது குடும்பத்தின் மாதாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளன.
“இந்த உதவிகளைப் பெறுவதற்கு முன்பு, மாத இறுதியில் சில சமயங்களில் நாங்கள் மளிகைப் பொருட்களைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது அல்லது மிகவும் அவசியமான பொருட்களை வாங்குவதைத் தள்ளிப்போட வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மளிகைப் பொருட்களுக்கான கடன் வசதி (grocery credits) இப்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஈடுசெய்வதால், அவரது வருமானத்தை மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் மருந்துச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்; ஏனெனில் அவரது மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லத்தரசியாக உள்ளார்.
“அத்தியாவசிய மளிகைப் பொருட்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைப்பது எங்களுக்கு மனநிம்மதியை அளிக்கிறது. ஏனெனில், எங்கள் வரவு-செலவுத் திட்டம் எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும், வீட்டில் உணவும் அடிப்படைத் தேவைகளும் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்,” என்று கூறிய அவர், எதிர்காலத்தில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு க்கு ஏற்ப இந்த நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு அரசாங்கத்தின் இத்திட்டங்களால் பயனடையும் நாடு முழுவதும் உள்ள சுமார் 90 லட்சம் மலேசியர்களில் முகமது டேனியல் ஒருவராவார்.




