நாட்டின் மிக மோசமான புகைமூட்டச் சூழலைச் சரவாக் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. சரவாக்கில் உள்ள செரியான் கண்காணிப்பு நிலையத்தில் காலை 8.45 மணி முதல் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 188ஆகப் பதிவாகியுள்ளது.
இதுவே நாடு முழுதிலும் பதிவான மிக அதிகமான அளவு.
மலேசியாவின் இயற்கை வள, சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சின் கீழ் உள்ள சுற்றுப்புறத் துறை அந்தத் தகவலை வெளியிட்டது.
செரியானுக்கு அடுத்து, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஜோஹான் செத்தியாவில் குறியீடு 183ஆக இருந்தது.
இதற்கிடையே, இன்று காலையில் அதிகப் பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பதிவான மாநிலமாக ஜோகூர் இருந்தது. இவற்றில் பாசிர் கூடாங் (172), லார்க்கின் (169), தாங்க்காக் (166) ஆகியவை அடங்கும் என்று ‘மலாய் மெயில்’ ஊடகம் தெரிவித்தது.
சிலாங்கூரில் உள்ள கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியும் புகைமூட்டத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. கோலாலம்பூரில் உள்ள செராஸ் (170), ஷா ஆலம் (167), புத்ராஜெயா (165) உட்பட பல பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 150க்கு மேல் பதிவானது.
மற்ற இடங்களிலும் குறியீடு ஆரோக்கியமற்ற வரம்பில் இருந்தது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நிலாயில் 167ஆகவும் சரவாக்கில் உள்ள சமரஹானில் 163ஆகவும் குறியீடு பதிவானது.




