கெலானா ஜெயா எல்ஆர்டி (LRT) வழித்தடத்தில் இயங்கிய ஒரு ரயிலின் கதவு சரியாக மூடப்படுவதைத் தடுத்த தொழில்நுட்பக் கோளாறு ஒன்று நேற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ரயில் ஆய்விற்காகச் சேவையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது. அந்த ரயில் சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 11.08 மணிக்குத் தங்கள் செயல்பாட்டுக் குழுவினர் இந்தக் கோளாறைக் கண்டறிந்ததாகத் தெரிவித்தது.
“இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழில்நுட்ப ஆய்வு மற்றும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த ரயில் சேவையிலிருந்து உடனடி யாகத் திரும்பப் பெறப்பட்டது,” என்று அது கூறியது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, செயல்பாட்டுப் பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
“அந்த ரயில் ‘தாமான் பகாகியா’ நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது; அங்கு பயணிகள் பாதுகாப்பாக இறங்கி, அடுத்து வரும் ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்,” என்று ராபிட் கேஎல் கூறியது.
பொருத்தமான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, ரயிலின் கதவு அமைப்பை ஆய்வு செய்வது உட்பட, அத்தொழில் நுட்பக் கோளாறுக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அது மேலும் தெரிவித்தது.




